ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் நெரிசலில் நிற்கும் நோயாளிகள்


ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் நெரிசலில் நிற்கும் நோயாளிகள்
x
தினத்தந்தி 24 March 2020 10:15 PM GMT (Updated: 24 March 2020 8:50 PM GMT)

ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் நோயாளிகள் நெரிசலில் நிற்பது அலுவலர்கள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

ஆரணி,

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவக்கூடாது என்பதற்காக பாரத பிரதமர் மோடியும் மக்கள் ஊரடங்கை அறிவித்து கடைபிடிக்க செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் 144 தடை உத்தரவு அமலானது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் நெரிசலை தவிர்க்க வேண்டும், முகத்தில் முககவசம் அணிய வேண்டும், கைகளை தினமும் 15 முறை சோப், திரவம் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பஸ்கள், வேன். கார், ஆட்டோக்கள் இயக்கக்கூடாது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும். சினிமா தியேட்டர், மால், மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட் டன. மாவட்ட எல்லையை தாண்டி நாமும் போகக்கூடாது, வெளியாட்களும் நமது மாவட்டத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அரசு சார்பில் நோயாளிகள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என கோடிட்டும் பாதுகாவலர்களை கொண்டு ஒழுங்குபடுத்தியும் எந்தவித அறிவிப்பிற்கும் அஞ்சாமல் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சமின்றி ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு செல்லும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

எத்தனையோ முறை விழிப்புணர்வு செய்தும் அதனை மருத்துவமனையில் கூட கடைபிடிக்காமல் நோயாளிகள் நெரிசலில் நிற்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அனைவரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story