விருத்தாசலம் அருகே பரபரப்பு: மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி அடித்துக் கொலை - பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு


விருத்தாசலம் அருகே பரபரப்பு: மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி அடித்துக் கொலை - பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 25 March 2020 1:10 AM GMT)

விருத்தாசலம் அருகே மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அடித்துக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிளசன்ராஜ் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி தீபா(20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கிக்கொண்டனர். இதைபார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாக்கியராஜ்(30) என்பவர் பிளசன்ராஜிடம் சென்று ஏன் இப்படி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாய் என்றார். இதனால் பிளசன்ராஜிக்கும், பாக்கியராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அங்கு கிடந்த கல்லால் பிளசன்ராஜை சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த தீபா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதனிடையே பாக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிளசன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பிளசன்ராஜின் உறவினர்கள் ஒன்று திரண்டு வயலூர் பாலம் அருகே சென்றுக்கொண்டிருந்த அந்த ஆம்புலன்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலேயே பிளசன்ராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் முண்டியம்பாக்கத்தில் தான் உள்ளது என்று கூறினர். இதை ஏற்ற உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story