144 தடை உத்தரவால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் - விழுப்புரத்தில் சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக்கடையில் மது


144 தடை உத்தரவால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் - விழுப்புரத்தில் சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக்கடையில் மது
x
தினத்தந்தி 24 March 2020 10:15 PM GMT (Updated: 25 March 2020 1:10 AM GMT)

144 தடை உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ள முழு உத்வேகத்துடன் நேற்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இது ஒரு புறம் இருக்க டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், மதுபிரியர்கள் தங்களது தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைப்பதிலேயே அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதனால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.

கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி நிற்காமல் இருப்பதற்கு ஏதுவாக கடை முன்பு ஒரு மீட்டர் இடைவெளியில் வெள்ளைக்கோடு போடப்பட்டு அந்த இருகோடுகளுக்கு உட்பட்ட கட்டத்திற்குள் நின்றுதான் மதுவாங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் அறிவுறுத்தினர். அதன்படி மதுபானங்களை வாங்கிச்சென்றனர். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இயங்காது என்பதால் பகல் 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதில் இருந்து மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் ஊழியர்கள் விதித்திருந்த வெள்ளைக்கோடு நடை முறையை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனர். சிலர் மதியம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் அதிகமானதால் மதுபானம் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற எண்ணத்தில் மதுபிரியர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச்சென்று மதுபானங்களை வாங்கினர். சிலர் ஒரு வார காலத்திற்கு தேவையான மதுபானங்களை மொத்தமாகவும் வாங்கிச்சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது.

Next Story