கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவையில் 2-வது நாளாக கிருமி நாசினி தெளிப்பு - தண்டோரா மூலம் விழிப்புணர்வு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவையில் 2-வது நாளாக கிருமி நாசினி தெளிப்பு - தண்டோரா மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 March 2020 10:45 PM GMT (Updated: 25 March 2020 1:10 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவையில் நேற்று 2-வது நாளாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை,

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் பஸ்நிலையம், பஸ்நிறுத்தம், பஸ்கள், அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த பணியானது நேற்றும் 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்றது. கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி, தென்கரை பேரூராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள், வீடுகள், வாகனங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் கோவை-ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னகள்ளிபட்டி ஊராட்சி 7-வது வார்டில் உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்- சத்தி மெயின் ரோட்டில் சென்ற வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட் டது. காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா தலைமையில் ஊராட்சி தலைவர் ரங்கசாமி மேற்பார்வையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனங்கள் மற்றும் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பிற வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தண்டோரா மூலம் எடுத்து கூறப்பட்டது. காரமடை பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கக்கோரி, தண்டோரா அடித்தும், ஒலி பெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் சின்னச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர். காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன், மேற்பார்வையில் 18 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் புதர் மண்டிக்கிடந்த கழிவறைகள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் தங்களது உடல் முழுவதும் கவசம் அணிந்தவாறு இருந்தனா். மேலும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Next Story