கொரோனா வைரசை பரவசெய்யும் செயலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை - கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை


கொரோனா வைரசை பரவசெய்யும் செயலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை - கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 25 March 2020 2:42 AM GMT)

கொரோனா வைரஸ் நோயை பரவ செய்யும் செயலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 1-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். எனவே பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியே வர வேண்டும். 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாணையில் விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர ஏனைய கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பணியாளர், ஒப்பந்த வாகனங்கள், மெட்ரோ ரெயில் சேவைகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவைகள் இயக்க தடை செய்யப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் கொள்ளை நோய்கள் சட்டம் 1897-ன் கீழ் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அதிகாரம் கொண்ட அரசு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாதவருக்கு ஒரு மாத சிறை தண்டனை அல்லது ரூ.200 வரையான அபராதம் அல்லது இவையிரண்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.மேலும் உயிருக்கு ஆபத்தான நோயை பரவச் செய்யக்கூடிய செயலில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டு வரை அபராதத்துடன் சிறை தண்டனையும், பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்த 521 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் அனைவரும் 1077 என்ற கட்டணமில்ல டெலிபோன் எண்ணில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயர் விவரத்தை தெரிவித்து வீடுகளிலேயே தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்த 940 பேரும் சுகாதரத்துறையினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள தாலுகாவுக்கு 100 படுக்கைகள்வீதம் 10 தாலுகாக்களில் 1,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

144 தடை இருப்பதால் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக டோக்கன் முறையில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

ஆதரவற்றோர், முதியோர், சாப்பிட வசதி இல்லாதவர்கள் போன்றவர்களுக்காக 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் சமுதாய உணவு கூடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே கொரோனோ தொற்றை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்கள் அல்லது சிகிச்சை முறை குறித்து 1077 என்ற டெலிபோன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளவர்கள் யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால்சுங்காரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமே‌‌ஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story