ஆவடி அருகே, கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய இரட்டை சகோதரர்கள் உடல் மீட்பு


ஆவடி அருகே, கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய இரட்டை சகோதரர்கள் உடல் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2020 10:48 PM GMT (Updated: 25 March 2020 10:48 PM GMT)

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய இரட்டை சகோதரர்கள் உடல் மீட்க்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர், டவர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 43). இவரது மனைவி கலைமதி (37). இவர்களுக்கு ஜேனட் ஜாய் (16) என்ற மகளும், ஜஸ்டின் (13), ஜெபஸ்டின் (13) ஆகிய இரட்டை ஆண்பிள்ளைகளும் உண்டு. சிறுவர்கள் 2 பேரும், திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் விடுமுறையில் இருந்த இரட்டை சகோதரர்களான ஜஸ்டின், ஜெபஸ்டின் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ஆவடி அடுத்த மிட்டனமல்லி கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது, நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆவடியில் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கிருஷ்ணா கால்வாயில் விழுந்த சிறுவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிச்சென்றனர். சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை கைவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் சிறுவர்கள் இருவரின் உடலும் மிதந்து கொண்டு இருப்பதை கண்டு ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story