ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கட்டுப்பாடு - வரிசையாக நிற்க கோடுகள் அமைப்பு


ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கட்டுப்பாடு - வரிசையாக நிற்க கோடுகள் அமைப்பு
x
தினத்தந்தி 25 March 2020 10:45 PM GMT (Updated: 26 March 2020 3:08 AM GMT)

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் வரிசையாக நின்று செல்லும் வகையில் கோடுகள் அமைத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. இதனால் காய்கறிகள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டும் என்றும், அதுவும் கூட்டமாக சென்று பொருட்களை வாங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான காய்கறி கடைகள் உள்ளன. அங்கு கூட்டம் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வரிசையாக சென்று காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினார்கள். இதற்காக ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் நிற்கும் வகையிலும் கோடுகள் அமைக்கப்பட்டன.

காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஈரோடு ஆர்.கே.வி.ரோடு வரை வெள்ளை நிற கோடுகள் அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. பொதுமக்கள் இந்த கோடுகளின் அடிப்படையில் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், போலீசார் ஒலி பெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 6 நுழைவு பாதைகள் உள்ளன. இதில் முக்கிய பாதையை தவிர மற்ற நுழைவு பாதைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் தங்களது வாகனத்தை ஆர்.கே.வி.ரோட்டிலேயே நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்கு நடந்து செல்ல வேண்டும்”, என்றனர்.

Next Story