வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்


வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 26 March 2020 10:15 PM GMT (Updated: 27 March 2020 4:39 AM GMT)

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வார்டு மற்றும் சுகாதார வசதிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 905 பேருக்கும் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் தலா ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும். திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்ட 60 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என உறுதி செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் இல்லை என்ற நிலை இதுவரை நீடித்து வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு என்பது நமக்கே நாமாக ஏற்படுத்தி கொள்ளப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 144 தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த 144 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பொன்.வாசுகிராம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்து திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூச்சியியல் வல்லுனர் பழனிச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், அரசு மருத்துவர் பத்மேஷ், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் மருதுராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story