திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 March 2020 12:30 AM GMT (Updated: 28 March 2020 8:03 PM GMT)

திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய சித்தப்பா அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது 28). மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு தெய்வக்கனி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்தவர் கணேசன் (57). கூலி தொழிலாளியான இவர், ராஜதுரையின் சித்தப்பா உறவுமுறை ஆவார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ராஜதுரை கடந்த சில நாட்களாக தனது கடையை திறக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் தோப்பூர் கடற்கரையில் நண்டு பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது அவர் தன்னுடைய சித்தப்பா கணேசனையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் 2 பேரும் தோப்பூர் கடற்கரைக்கு செல்லும் வழியில், ஊர் பொதுக்கிணறு அருகில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

ஆனாலும் அவர்கள் 2 பேரையும் மர்மநபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் அலறி துடித்தவாறு தோப்பூர் நோக்கி ஓடி வந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் 9 பேரும் அங்கிருந்து கடற்கரை நோக்கி இருளில் தப்பி ஓடி விட்டனர்.

இதற்கிடையே ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள், பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜதுரை நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், பக்கத்து தெருவான வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 25-ந்தேதி வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் தோப்பூரைச் சேர்ந்த சிலர் தாக்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பழிக்குப்பழியாக எதிர்தரப்பினரை தாக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் அவர்கள் தோப்பூர் பொதுக்கிணறு அருகில் பதுங்கி இருந்து ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் ராஜதுரை உயிரிழந்தார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் மற்றும் அவர்களுடைய நண்பர்களான ராஜசேகர், ஆனந்தன், அஜய் பாரதி, குரு, ராகுல், மகேந்திரன் ஆகிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜதுரையின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாரத் (திருச்செந்தூர்), பிரதாபன் (தூத்துக்குடி) ஆகியோர் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சித்தப்பாவுடன் சென்ற மெக்கானிக்கை முன்விரோதம் காரணமாக 9 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story