நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்


நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்
x
தினத்தந்தி 28 March 2020 11:15 PM GMT (Updated: 28 March 2020 11:03 PM GMT)

மாதவரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிவிட்டு, செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம், 

காங்கிரஸ் பிரமுகருக்கு வெட்டு

மாதவரம் உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 52). இவர், மாதவரம் பகுதி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். நேற்று காலை, மாதவரத்தில் உள்ள ஆந்திர மாநில அடுக்குமாடி பஸ் நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், வெங்கடேசனிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட அவர், செல்போன் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்தார்.

அப்போது மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தோள்பட்டை மற்றும் கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வெங்கடேசனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதை பார்த்த அங்கிருந்த சிலர், மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனை மீட்டு மூலக்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story