கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 29 March 2020 12:05 AM GMT (Updated: 29 March 2020 12:05 AM GMT)

கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுப்பது பற்றி ஆலோசிக்க பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் இந்தநோய்க்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூகஇடைவெளி முறையை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் தற்காலிக மருத்துவ மையங்களை கர்நாடக அரசு அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு வாரமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். காய்கறி, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும், மாநில அரசை கடுமையாக குறை கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் கர்நாடக அரசு சார்பில் கொரோனா குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்து உள்ளார்.

எடியூரப்பா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

Next Story