ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 30 March 2020 4:30 AM GMT)

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 5-வது நாளாக நேற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் வரை காய்கறி, மளிகை கடைகள் முழு நேரமும் திறந்து இருந்தன. ஆனால் தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பிறகு காய்கறி, மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன.

இதேபோல் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டம் போடப்பட்டு இருந்தன. இதை கடைபிடித்து பொதுமக்கள் மருந்து பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக நேற்று காலையில் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

Next Story