ராயபுரத்தில் பண்ணை பசுமை கடை மூலமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை - அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


ராயபுரத்தில் பண்ணை பசுமை கடை மூலமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை - அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 March 2020 10:30 PM GMT (Updated: 31 March 2020 9:27 PM GMT)

ராயபுரத்தில் வடசென்னை கூட்டுறவு மொத்த பண்டக சாலை மற்றும் பண்ணை பசுமை காய்கறி கடை மூலமாக பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் வடசென்னை கூட்டுறவு பண்டக சாலை சார்பில் பண்ணை பசுமை காய்கறி கடை மூலமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி மூலம் நடைபெறும் இந்த விற்பனையை சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி முன்னிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த பண்ணை பசுமை காய்கறி கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி 15 நாட்களுக்கு பயன்படும் வகையில் ரூ.250-க்கு வெங்காயம், தக்காளி, உருளைகிழங்கு ஆகியவை தலா ஒரு கிலோவும், தேங்காய் மற்றும் வாழைக்காய் ஆகியவை தலா 2-ம், கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், சேனைக்கிழங்கு ஆகியவை தலா 500 கிராமும், பச்சை மிளகாய் 150 கிராம் மற்றும் கருவேப்பிலை ஆகியவை அடங்கிய பை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மளிகை பொருட்கள் கடையில் விற்பனை செய்யப்படுவதைவிட குறைவான விலையிலேயே இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலை முதலே ராபின்சன் பூங்காவில் குவிந்தனர். மேலும் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளிவிட்டு பொருட்கள் வாங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீண்டநேரம் வெயிலில் காத்திருந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் பொருட்கள் வாங்க காத்திருந்த நிலையில் அவர்கள் நின்ற இடத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

முதியவருக்கு முககவசம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராயபுரம் வழியாக சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்கு சாலையில் அமர்ந்திருந்த ஆதரவற்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவரை பார்த்ததும் காரை விட்டு கீழே இறங்கினார். அந்த முதியவருக்கு முகக்கவசம் வழங்கியதுடன் அவருக்கு உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்தார்.

மேலும் அவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கும் உடனடியாக அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

Next Story