வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் உள்பட 2 பேர் கைது - காரைக்காலில் போலீசார் அதிரடி


வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் உள்பட 2 பேர் கைது - காரைக்காலில் போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 1 April 2020 7:28 AM GMT (Updated: 1 April 2020 7:28 AM GMT)

காரைக்காலில் வீட்டில் வைத்து சாராய பாக்கெட்டுகள் தயாரித்து விற்றவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை ஒரு சிலர் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் பல இடங்களில் இது தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் காரைக் காலை அடுத்த கொன்னக் காவலி கிராமத்தில், வீட்டில் வைத்து பாக்கெட் மற்றும் பாட்டில்களில் சாராயம் விற்பதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக் டர் லெனின் பாரதி தலைமையில் போலீசார் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 28) என்பவர் அருகில் உள்ள சாராயக்கடையில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து தனது வீட்டில் வைத்து பாட்டில், பாக்கெட்டில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து கலால் துறை அதிகாரி தேவதாஸ் முன்னிலையில் கலைச்செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராயம், சாராய பாக்கெட், சாராய பாட்டில் மற்றும் பாட்டில் சீல் வைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கலைச்செல்வனுக்கு சாராயக்கடையில் இருந்து சாராயம் வழங்கிய பிரபு (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story