கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் - அமைச்சர் காமராஜ் தகவல்


கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் - அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 1 April 2020 10:00 PM GMT (Updated: 2 April 2020 4:14 AM GMT)

கொரோனா நிவாரண பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் அனைவரின் வீடுகளுக்கும் வந்து சேரும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரடாச்சேரி,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த திட்டம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சமுதாய விலகல் கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து ரூ.1000 நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கார்டுதாரர்கள் எப்போது வர வேண்டும் என்பதற்கு காலம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.

ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே ரொக்கம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது குறித்த டோக்கன் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் பெறுவதற்கான ஒதுக்கப்பட்ட கால அவகாசத்தின்படி சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும்.

அதில் குறிப்பிட்டுள்ள நேர அளவின்போதுதான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும். டோக்கன் பெறுவதற்காக ரேஷன் கடைகளுக்கு யாரும் வரவேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூரில் இன்று காலை 9 மணிக்கு இந்த திட்டத்தினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைக்கிறார்.

Next Story