ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 2 April 2020 10:00 PM GMT (Updated: 3 April 2020 4:15 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுக்குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று வரை 560 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி சென்று வந்தவர்கள் 57 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 45 பேர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் 11 பேர் உள்ளனர். ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ளார்.

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 45 பேரில் 10 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மேல்விஷாரத்தை சேர்ந்த 2 பேர், அரக்கோணத்தை சேர்ந்த ஒருவர், பனப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 4 பேரும் 38 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் 4 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story