கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுப்பு


கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுப்பு
x
தினத்தந்தி 3 April 2020 9:05 AM GMT (Updated: 3 April 2020 9:05 AM GMT)

புதுவை அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்கு வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுத்து சென்றனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து விதமான வணிக நிறுவனங்களும் மூடிக் கிடக்கின்றன. சலவை செய்வோர், முடிதிருத்துவோர், சிறு வியாபாரம் செய்வோர், வீடு, வீடாக சென்று பழைய பேப்பர் வாங்கி விற்பனை செய்வோர், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவர்கள் வேலைக்கு செல்லாததால் பணமின்றி தவிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் பொருட்கள் வாங்கிட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். கடந்த 31-ந் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று சட்டசபையில் உறுதி அளித்தார். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த தொகை செலுத்தப்படவில்லை. இதனால் நாள்தோறும் பொதுமக்கள் வங்கிக்கு வந்து பணம் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மஞ்சள் நிற அட்டை தாரர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. அரசு அளிக்கும் உதவித்தொகை பெற மக்கள் வங்கிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.இதனால் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story