தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்


தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்
x
தினத்தந்தி 3 April 2020 11:15 PM GMT (Updated: 3 April 2020 6:22 PM GMT)

தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது நடந்த கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

தென்காசி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல்வேறு முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஊரடங்கை மீறி தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தென்காசி நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மதியம் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த பள்ளிவாசலுக்கு விரைந்தனர். அங்கு கூடி இருந்தவர்களிடம், ‘இப்படி கூட்டமாக கூடக்கூடாது. அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்‘ என்று கூறினர்.

அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது நாற்காலிகள் வீசப்பட்டன. இதனால் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தின்போது, போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார், 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதில் 4 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் கூறுகையில், ‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இது பொதுமக்களின் நன்மைக்காகவே செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அதை சற்றும் உணராமல் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தத்துக்கு உரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

Next Story