கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேங்கும் சின்ன வெங்காயம் விற்க முடியாததால் விவசாயிகள் வேதனை


கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேங்கும் சின்ன வெங்காயம் விற்க முடியாததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 3 April 2020 10:00 PM GMT (Updated: 4 April 2020 5:02 AM GMT)

கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் தேங்கியுள்ளது. அவற்றை விற்க முடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பெரம்பலூர்,

சின்ன வெங்காயம் சாகுபடியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாக்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் பெரம்பலூரில் இருந்து திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. மேலும் வியாபாரிகளும் நேரடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலுக்கு வந்து, சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.150-க்கு விற்பனையானது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டனர். ஆனால் அப்போது பருவநிலை மாற்றத்தால் சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் ஏற்பட்டு, மாவட்டத்தில் 80 சதவீதம் அளவுக்கு சின்ன வெங்காய சாகுபடி பாதிப்படைந்தது. ஆனால் தற்போது மாவட்டத்தில் 3,500 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகி அறுவடை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் தேக்கம் அடைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயலில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணி கூறுகையில், வெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 500, 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும் நிலையில் ரூ.1 லட்சம் வரை செலவாகும். மேலும் வேலையாள் கூலி, உரம், களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவழித்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தியானது.

ஆனால் ஊரடங்கு உத்தரவால் கொள்முதல் செய்ய வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வராததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் வயலில் உள்ள பட்டறைகளில் தேங்கியுள்ளது. சின்ன வெங்காயத்தை விற்க முடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சில விவசாயிகள் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று சின்ன வெங்காயத்தை விற்கும் நிலை உள்ளது. மேலும் தகுந்த போக்குவரத்து வசதி இல்லாததால் உள்ளூர் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட் மற்றும் கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கு மேல் விற்பனையாகிறது. ஆனால் உள்ளூர் வியாபாரிகள், விவசாயிகளிடம் சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.25 முதல் ரூ.35-க்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகமாகும்போது அதனை சேமிக்க குளிர்பதன கிடங்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் பயன்பாடில்லாமல் மூடப்பட்டு விட்டது. வயலில் உள்ள பட்டறையில் அதிக நாட்களுக்கு சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது. எனவே இதுகுறித்து உரிய ஆய்வு செய்து குளிர்பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் ஏற்பட்ட வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.

Next Story