உலகையே முடங்க வைத்த கொரோனாவால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்கள்


உலகையே முடங்க வைத்த கொரோனாவால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 3 April 2020 10:30 PM GMT (Updated: 4 April 2020 5:02 AM GMT)

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கும் சூழலில் வேலைக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் வாழ்ந்து வந்த தினக்கூலி தொழிலாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மணப்பாறை,

ஒட்டுமொத்த நாடுகளாலும் இன்று அதிகம் பேசப்பட்டு வருவது கொரோனா என்ற அந்த ஒற்றை சொல்லைத்தான். ஆம். அதிக அளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பு நடவடிக்கையே மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்பதன் அடிப்படையில் இன்று நாடே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்திலும் இன்று அதே நிலை தான்.

கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அரசு அடுத்தடுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் நோயின் அபாயத்தை மக்கள் உணர்ந்து செயல்படும் விதமாக 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் நிறைவு பெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 88 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமங்கள், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளை சேர்ந்த மக்கள், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டிட தொழிலாளர்களாக சென்று வேலை பார்த்து வந்தனர். இதுமட்டுமின்றி பலரும் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலும் பல நாட்கள் தங்கியிருந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வந்தனர்.சராசரியாக நாள் ஒன்றுக்கு சித்தாள் வேலைக்கு ரூ.200-ம், மண்வெட்டி வைத்து வேலை செய்பவருக்கு ரூ.400-ம், கொத்தனாருக்கு ரூ.600-ம், மேஸ்திரிக்கு பணி ஆட்களை பொருத்து ரூ.1000 வரையும் கூலியாக கிடைக்கும். விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் கட்டிடத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த மக்கள் இன்று வேலையின்றி பரிதவிக்கும் நிலை மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கு சென்று சம்பளம் பெற்றால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்று வாழ்ந்து வந்த கட்டிட தொழிலாளர்கள் எல்லோரும் இனி நம் வாழ்வின் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.பல ஆயிரம் தொழிலாளர்களின் நிலை இதுவாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது. உண்ணுவதற்கு கூட நிறைவான உணவில்லாமல் நித்தம் நித்தம் செத்து பிழைத்து வரும் சூழலில் எப்போது ஊரடங்கு முடியும் நாம் வேலைக்கு சென்று, வறுமையை ஒழிக்கும் போராட்டத்தை தொடங்கலாம் என்ற மனநிலையில் தான் ஒவ்வொரு ஊரடங்கு நாளையும் வேதனையுடன் கனத்த இதயத்தோடு கடந்து செல்கின்றனர்.

இதேபோல் மணப்பாறை, மருங்காபுரி ஆகிய இரண்டு தாலுகா பகுதிகளிலும் அதிக அளவில் நாடக கலைஞர்கள் வசித்து வருகின்றனர். திருவிழா காலங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் நாடகத்தின் மூலம் தான் தங்களின் வருவாயை பார்த்துக் கொண்டதோடு வாழ்வை நடத்தி வந்தனர். திருவிழா காலங்களில் சென்று நாடகத்தில் நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து தான் வரும் மாதங்களில் சிரமமின்றி வாழ்வது வழக்கம். தற்போது, கோவில்களில் திருவிழா காலம்.ஆனால் இந்த முறை கொரோனா தடையால் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதனால் திருவிழாக்கள் அனைத்தும் தடைபட்டுள்ளன. இதன்காரணமாக எந்த பகுதியிலும் நாடகங்கள் உள்ளிட்ட ஏதும் கிடையாது. இதனால் நாடக கலைஞர்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழலில் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற அச்சத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி வறுமையின் கோரப்பிடியில் நித்தம் நித்தம் கண்ணீர் சிந்தி வரும் பரிதாபமும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது. மேலும் தினக்கூலிகளாக வேலை பார்த்து வந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களின் நிலையும் இப்படியாகத்தான் இருக்கின்றது. 21 நாள் ஊரடங்கில் அரசின் உத்தரவை பின்பற்றி வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும் கூட, ஊரடங்கு காலத்திற்கு பின் வறுமையில் இருந்து எப்படி மீளப்போகின்றோமா என்ற அச்ச உணர்வு தொழிலாளர்களின் மனதில் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.

Next Story