சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்


சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்
x
தினத்தந்தி 4 April 2020 10:54 AM GMT (Updated: 4 April 2020 10:54 AM GMT)

புதுவை எல்லை பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை அமைச்சர் என்று தெரியாமல் தமிழக போலீசார் மடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை எல்லை பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தீவிர சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.

புதுவையின் நிலவரம் குறித்து நாள்தோறும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோல் நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனியாக சைக்கிளில் சென்று நேரு வீதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகளை ஆய்வு செய்தார். அதன்பின் புதுவை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றார். பொதுமக்கள் அங்கு சமூக இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்குவதை பார்வையிட்டார். தேவையான காய்கறிகள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் நாள்தோறும் காய்கறி மார்க்கெட்டுக்கு வராமல் 5 நாட்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், வெளியில் நடமாடுவதை அறவே நிறுத்தி கொள்ளுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

அதன்பின் அங்கிருந்து சைக்கிளிலேயே இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை வழியாக கோரிமேடு சென்றார். மாநில எல்லைப்பகுதியான அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் டிராக் சூட், டி-சர்ட் அணிந்து சைக்கிளில் வந்த அவரை அமைச்சர் என்று தெரியாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் தன்னை புதுச்சேரி அமைச்சர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு அவரை போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த முகாமில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துப்புரவு பணியாளர்கள் வந்த பஸ்சில் ஏறி அவர்களிடம் விசாரித்தார். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்பு அவர் வீடு திரும்பினார்.

Next Story