ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி
x
தினத்தந்தி 5 April 2020 11:30 PM GMT (Updated: 5 April 2020 9:38 PM GMT)

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவ உபகரண வசதிகளுடன் தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்து வந்து, பரிசோதனைகள் மேற்கொண்டு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் மராட்டியம் மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள். இவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் தாமாக முன்வந்து தங்களை பரிசோதிக்குமாறு வார்டில் சேர்ந்துள்ளனர்.

மற்றொருவர் கோவையில் இருந்து திரும்பி வந்த நிலையில் இருமல், காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் 3 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story