சேத்தியாத்தோப்பு, பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு


சேத்தியாத்தோப்பு, பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2020 10:15 PM GMT (Updated: 6 April 2020 3:42 AM GMT)

சேத்தியாத்தோப்பு, பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், நேற்று சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேத்தியாதோப்பு கடைவீதி மளிகை கடைகளில் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கக்கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் நியாயமான விலையில் விற்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதா? என பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி பொறியாளர் ராஜா, கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி பணியாளர்கள் செல்வராஜ்,சேகர், சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் பெண்ணாடம் பஸ்நிலையம், கடை வீதி ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையம், கடை வீதி ஆகிய இடங்களில் பொதுமக்கள் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என ஆய்வு செய்தார். அப்போது திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூக நல தாசில்தார் ரவிச்சந்திரன், விருத்தாசலம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரபாகரன், ஊராட்சிகளின் தணிக்கை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத் நாயுடு, நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், காமராஜ் பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், வடலூர் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story