திருவண்ணாமலை அருகே, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி சிறுவன் சாவு


திருவண்ணாமலை அருகே, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 5 April 2020 10:45 PM GMT (Updated: 6 April 2020 4:54 AM GMT)

திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம்கொடுத்துவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில் 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வேண்டாமணி (வயது 21). இவர்களது மகன் சிவசங்கர் (2), மகள் வினோதினி (4 மாதம்).

வேண்டாமணி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினமும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் இறந்துவிட்டால், குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்று நினைத்த வேண்டாமணி அவர்களை கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தைகள் இருவருக்கும் பிஸ்கெட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷத்தை சாப்பிட்டு விட்டு தனது தந்தை ஆறுமுகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது மருமகன் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் அளித்தார். அவர் உடனடியாக வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிறுவன் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டான். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அடி அண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story