மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை முன்கூட்டியே அனுப்பப்படும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை முன்கூட்டியே அனுப்பப்படும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 April 2020 10:30 PM GMT (Updated: 6 April 2020 5:09 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை முன்கூட்டியே அனுப்பப்படும் என்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தூத்துக்குடி, 

தமிழ்நாடு முழுவதும் தற்போது கொரோனோ வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசின் அத்தியாவசிய பணிக்காக பல்வேறு துறைகள் பணியாற்றிட ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர் பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தும் விதமாக முதல்–அமைச்சரின் உத்தரவின் பேரில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஆணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை முன்கூட்டியே வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்த மாதம் (ஏப்ரல்), மே ஆகிய 2 மாதங்களுக்கு, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 750 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.22 லட்சத்து 50 ஆயிரமும், மனவளர்ச்சி குன்றியோர் 5 ஆயிரத்து 200 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 56 லட்சமும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 40 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமான 103 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 9 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 79 ஆயிரம் உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வங்கி கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story