ஊரடங்கால் பதநீர் விற்க தடை எதிரொலி: ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உதவிக்கு காத்திருக்கும் கிராம மக்கள்


ஊரடங்கால் பதநீர் விற்க தடை எதிரொலி: ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உதவிக்கு காத்திருக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 April 2020 10:15 PM GMT (Updated: 6 April 2020 6:56 PM GMT)

ஊரடங்கால் பதநீர் விற்க தடை விதிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உதவிக்காக மக்கள் காத்து இருக்கின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்து உள்ளது அந்தோணியார்புரம். இங்கு பனை தொழில் பிரதானமான தொழிலாக அமைந்து உள்ளது. இந்த பகுதியில் சுமார் 700 பனை மரங்கள் உள்ளன. அவற்றில் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர்கள் பதநீர் இறக்கி வருகின்றனர். இவர்கள் பதநீரை மொத்தமாக ஊர் மக்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.

இந்த கிராமத்தில் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஊர் மக்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஆண்டுதோறும் பதநீர் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை பள்ளிக்கூட நிதியாக வைத்து அந்த பள்ளிக்கூடத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு பதநீர் சீசன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்கு பிறகு தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் பதநீர் அதிக அளவில் கிடைத்தது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பதநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பதநீரை விற்பனை செய்ய முடியாததால், அதை காய்த்து கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கூடத்துக்கு நிதி சேர்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. ஆகையால் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அந்தோணியார்புரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, நாங்கள் ஆண்டுதோறும் பதநீர் விற்பனை செய்து அதன்மூலம் சுமார் ரூ.3½ லட்சம் வரை வருவாய் ஈட்டுவோம். அந்த பணத்தை கொண்டு எங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தோம்.

தற்போது பதநீர் உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, பதநீர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கு நிதி சேர்க்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இந்த பதநீரை கருப்புக்கட்டியாக தயாரித்து வைத்தாலும், அதனை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகையால் அரசு எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story