நாமக்கல்லில், என்ஜினீயரிங் மாணவி கொலையில் தங்கை, காதலனுடன் கைது - முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்


நாமக்கல்லில், என்ஜினீயரிங் மாணவி கொலையில் தங்கை, காதலனுடன் கைது - முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 7 April 2020 12:00 AM GMT (Updated: 7 April 2020 5:21 AM GMT)

நாமக்கல்லில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தங்கை, காதலனுடன் கைது செய்யப்பட்டார். முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கை, தனது காதலனுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகள் மோனிஷா (வயது 18). இவர் எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறை ஒன்றில் தனியாக இருந்த மோனிஷாவின் இடது கையில் பிளேடால் அறுத்த காயம் இருந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து வேட்டாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் மோனிஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் மோனிஷா கொலை வழக்கில் 17 வயது நிரம்பிய அவரது தங்கை மற்றும் தங்கையின் காதலனும், நாமக்கல் பி.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவருமான ராகுலுக்கு (19) தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனிடையே அவர்கள் இருவரும் நேற்று காலை வேட்டாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் சரண் அடைந்தனர். அவர் இருவரையும் நாமக்கல் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

கல்லூரி மாணவர் ராகுல், மோனிஷாவின் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். அவரும் நாமக்கல் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மோனிஷாவின் தங்கையும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ராகுல், மோனிஷாவின் தங்கைக்கு அண்ணன் முறை ஆவார். எனவே இந்த முறையற்ற காதலை மோனிஷா அடிக்கடி தட்டிக்கேட்டு உள்ளார். மேலும் அவர்களின் காதலுக்கு இடையூறாக இருந்து உள்ளார். அத்துடன் மோனிஷாவின் பெற்றோரும் முறையற்ற காதலால் தங்களின் இரண்டாவது மகளுடன் பேசாமல் வெறுப்புடன் இருந்து வந்து உள்ளனர்.

எனவே அவர்கள் இருவரும் சேர்ந்து மோனிஷா உயிருடன் இருந்தால் நம்மால் சேர்ந்து வாழ முடியாது என கருதி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். அதன்படி கடந்த 4-ந் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மோனிஷா, அவரது தங்கை ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராகுல், தனது காதலியுடன் சேர்ந்து மோனிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் கொலையை மறைக்க மோனிஷாவின் இடது கையில் பிளேடால் அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உள்ளனர். இந்த நாடகம் பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து ராகுல் மற்றும் மோனிஷாவின் தங்கையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story