புழல் சிறையில் மோதல் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்ட கைதிகள் - மற்றொரு கைதி தற்கொலை முயற்சி


புழல் சிறையில் மோதல் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்ட கைதிகள் - மற்றொரு கைதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 8 April 2020 11:15 PM GMT (Updated: 8 April 2020 9:47 PM GMT)

புழல் சிறையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் ஏற்பட்ட மோதலில் கைதிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டனர். மற்றொரு கைதி கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்திய சிறையில் இருந்தும் தண்டனை கைதிகள் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கடலூர் சிறை தண்டனை கைதிகளான முத்துசாமி (வயது 57) மற்றும் சக்திவேல் (30) ஆகிய இருவரும் புழல் சிறையில் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முத்துசாமியை சக்திவேல் ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த பிளேடால் இருவரும் ஒருவரை ஒருவர் அறுத்துக்கொண்டனர். இதில் இருவருக்கும் உடல் முழுவதும் பிளேடால் அறுக்கப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சிறை போலீசார் இருவரையும் மீட்டு புழல் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தையல் போடப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (33). இவர், திருட்டு வழக்கில் மேட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது இவரும் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்டு இங்கு 18-வது பிளாக்கில் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் அடைக்கப்பட்டிருந்த அறை எதிரே கயிறுகட்டி நேற்று முன்தினம் மாலை துணிகளை காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது சிறை காவலர், இங்கே துணிகளை காயப்போடக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன், தான் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திடீரென தனது இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு அறையிலேயே படுத்துவிட்டார்.

ரத்தம் பீரிட்டு வெளியேறுவதை பார்த்த மற்ற கைதிகள், இதுபற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை மீட்டு புழல் சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சவுந்தரராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களாலும் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story