சாவு எண்ணிக்கை 5 ஆனது; கர்நாடகத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது


சாவு எண்ணிக்கை 5 ஆனது; கர்நாடகத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 9 April 2020 5:15 AM IST (Updated: 9 April 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அதே வேளையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 171 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். 4 பேர் மரணம் அடைந்திருந்தனர். 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கலபுரகியை சேர்ந்த 65 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரம் வருமாறு:-

உத்தர கன்னடாவை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ள அவர் துபாய் சென்று திரும்பிய கணவருடன் தொடர்பில் இருந்தவர். கலபுரகியை சேர்ந்த 65 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கலபுரகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நேற்று) மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே கலபுரகியை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டியாவை சேர்ந்த 35 வயது இளைஞருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும், ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 23 வயது இளைஞர், டெல்லி சென்று வந்துள்ளார். அவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது. அவரும் டெல்லிக்கு சென்று வந்துள்ளார். நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

முஸ்லிம்கள் தர்கா, மசூதியில் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சப்-பரத் என்ற நிகழ்ச்சியில் மயானத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story