கொரோனா ஊரடங்கால் கிடைத்த பயன் மும்பையில் காற்றுமாசு 50 சதவீதம் குறைந்தது - வன விலங்குகளுக்கும் சுதந்திரம்


கொரோனா ஊரடங்கால் கிடைத்த பயன் மும்பையில் காற்றுமாசு 50 சதவீதம் குறைந்தது - வன விலங்குகளுக்கும் சுதந்திரம்
x
தினத்தந்தி 14 April 2020 11:14 PM GMT (Updated: 14 April 2020 11:14 PM GMT)

கொரோனா ஊரடங்கால் மும்பையில் காற்றுமாசு 50 சதவீதம் குறைந்து உள்ளது. வனவிலங்குகளும் சுதந்திரமாக உலா வருகின்றன.

மும்பை, 

கெடுதலிலும் நல்லது நடக்கும் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதை நிரூபித்து இருக்கிறது, ஆட்கொல்லி கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசால் அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் சாலையோர காடுகளில் வசிக்கும் வன விலங்குகள் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சாலைகளில் ஒய்யாரமாக உலா வருகின்றன. ஓடி, ஆடி விளையாடுகின்றன.

குடியிருப்பு பகுதிகளிலும் அவை புகுந்து சுற்றி திரிந்து விளையாடுவதற்கு சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது இந்த ஊரடங்கு.

இத்துடன் மற்றொரு பயனாக பெருநகரங்களுக்கு தலைவலியாக உருவெடுத்து வரும் காற்று மாசு ஊரடங்கின் காரணமாக பெருமளவு குறைந்து உள்ளது. இதன்படி ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் டெல்லி மற்றும் மும்பையில் காற்று மாசு அதிரடியாக 50 சதவீதம் அதாவது சரிபாதியாக குறைந்து இருக்கிறது. மற்ற நகரங்களிலும் காற்றின் மாசு குறைந்து உள்ளது.

தற்போது எந்த நகரங்களும் மோசமான பிரிவின் கீழ் காற்றின் தரம் இல்லை. நல்ல அல்லது திருப்திகரமான பிரிவின் கீழ் காற்றின் தரம் உள்ளது.

இதேபோல ஒலி மாசும் வீழ்ச்சியை கண்டு உள்ளது. இது அமைதியை விரும்பும் மக்களுக்கும், வன விலங்கினங்களுக்கும், கிடைத்த தற்காலிக சுதந்திரம் என்பது தான் உண்மை.

Next Story