உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை பாதுகாப்புக்கான கண்ணாடி கூண்டு


உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை பாதுகாப்புக்கான கண்ணாடி கூண்டு
x
தினத்தந்தி 16 April 2020 11:00 PM GMT (Updated: 16 April 2020 7:52 PM GMT)

உடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கான கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

உடுமலை, 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளை கண்டறியும் மருத்துவர்கள், நர்சுகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோரது பாதுகாப்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான முக கவசம், முழு கவச உடை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற, நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி முதல்கட்ட மருத்துவ பரிசோதனைசெய்வதற்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டிற்குள் இருக்கும் மருத்துவர், இந்த கூண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள 2 துவாரங்கள் வழியாக கைகளை வெளியே விட்டு, வெளிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் நோயாளியை பரிசோதனை செய்வார்.

அதன்படி உடுமலை அரசு மருத்துவமனைக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற நோயாளிகளுக்கு முதல்கட்டமாக கொரோனா தொற்று அறிகுறி ஏதும் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு தொற்று அறிகுறி ஏதும் இல்லாத பட்சத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். கொரோனா தொற்று முதல்கட்ட அறிகுறி தென்பட்டால் மட்டும் மருத்துவர் குழுவினரின் ஆலோசனைப்படி மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்ற மருத்துவ பரிசோதனைக்கு, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி கூண்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் பயன்பாட்டை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உடுமலை ஆர்.டி.ஓ. ரவிக்குமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story