ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்


ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 April 2020 10:45 PM GMT (Updated: 17 April 2020 6:54 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் வரை 1,250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வந்தது.

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் அனைத்து வாகனங்களையும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் வாகனங்கள் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். அவர்களது ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகம், ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து, வாகனங்களை பெற்று சென்றனர். அவர்களிடம் ஒரு படிவத்தையும் போலீசார் நிரப்பி பெற்றுக் கொண்டு வாகனங்களை ஒப்படைத்து உள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் குறைந்த அளவிலான வாகன உரிமையாளர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Next Story