வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை வேளாங்கண்ணி அருகே பரிதாபம்


வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை வேளாங்கண்ணி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 18 April 2020 12:37 AM GMT (Updated: 18 April 2020 12:37 AM GMT)

வெளிநாட்டில் உள்ள கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேளாங்கண்ணி,

வெளிநாட்டில் உள்ள கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேளாங்கண்ணி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பெண்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சுகந்தி(வயது24). இவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மகன் ராஜா(33) என்பவருக்கும் கடந்த 12.9.2019 அன்று தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமணம் முடித்த இரண்டு மாதத்திற்கு பிறகு ராஜா, வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். ராஜாவின் வளர்ப்பு தந்தையான பாஸ்கரன் என்பவர் வீட்டில் சுகந்தி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது பெற்றோரிடம் தங்கியிருக்குமாறு நிர்த்தனமங்களத்துக்கு ராஜாவின் வளர்ப்பு தந்தை அனுப்பி வைத்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராஜா, சுகந்தியிடம் பேசாமல் இருந்தாக தெரிகிறது. இதனால் சுகந்தி மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த சுகந்தி நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுகந்தி தூக்கில் தொங்குவதை அருகில் உள்ளவர்கள் கவனித்து அவரை மீட்டு பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணமான 7 மாதங்களே ஆன நிலையில் சுகந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது இறப்பு குறித்து நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story