ஆத்தூர் அருகே பெண் டாக்டர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் பலி


ஆத்தூர் அருகே பெண் டாக்டர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் பலி
x
தினத்தந்தி 18 April 2020 10:30 PM GMT (Updated: 18 April 2020 8:29 PM GMT)

ஆத்தூர் அருகே பெண் டாக்டர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் பலியானார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இறந்து விட்டார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 32). இவர் ஒப்பந்த அடிப்படையில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொருட் களை கொண்டு சென்று சப்ளை செய்யும் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று காலை ஆத்தூரில் இருந்து சார்வாய் கிராமத்தில் உள்ள குடோனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்மம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது, நீலகிரி மாவட்டம் ஊட்டி கால்நடை மருத்துவமனை தெரு பகுதியை சேர்ந்த டாக்டர் சிவக்குமார் என்பவரது மனைவி டாக்டர் தாரணி (38) ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. பின்னர் நிற்காமல் சென்ற கார் ரோட்டின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் டாக்டர் தாரணி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் விபத்து குறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாரணி ஊட்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு தனியாக காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story