கோபி அருகே பரிதாபம்: தோட்டத்து மின்வேலியில் சிக்கி பெயிண்டர் சாவு - விவசாயி மீது வழக்கு


கோபி அருகே பரிதாபம்: தோட்டத்து மின்வேலியில் சிக்கி பெயிண்டர் சாவு - விவசாயி மீது வழக்கு
x
தினத்தந்தி 19 April 2020 10:00 PM GMT (Updated: 19 April 2020 7:15 PM GMT)

கோபி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). பெயிண்டர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சிவக்குமார், அவரது நண்பர்களான மணிகண்டன், அருண்குமார், சுபாஷ், சுரேஷ், லோகேஷ் ஆகியோருடன் பவானி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அவர்கள் விவசாய தோட்டங்கள் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஒரு வாழை தோட்டத்தில் பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சிவக்குமார் எதிர்பாராதவிதமாக மின்வேலியை தொட்டுவிட்டதாக தெரிகிறது.

இதில் சிவக்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அந்த தோட்டத்து விவசாயி மீது கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story