காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரேபிட் பரிசோதனை - கலெக்டர் பொன்னையா ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரேபிட் பரிசோதனை - கலெக்டர் பொன்னையா ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2020 10:30 PM GMT (Updated: 20 April 2020 10:08 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரேபிட் பரிசோதனை மையத்தினை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், மற்ற வார்டுகள் 5 மண்டலங்களாகவும், மாவட்டத்துக்கு உட்பட்ட 5 பேரூராட்சி பகுதிகள் 3 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அளித்த 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மூலம் நேற்று முதல் 5 இடங்களில் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பரிசோதனை மையத்தினை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக வந்துள்ள ரேபிட் கிட் கருவிகள் மூலம் காஞ்சீபுரம், மொளச்சூர், எம்.ஜி.ஆர்.நகர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட 5 பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்கள் 54 பேர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை சார்ந்து பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவபணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது என்றார்.

அப்போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடன் வந்தனர்.

Next Story