ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்


ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 April 2020 10:00 PM GMT (Updated: 22 April 2020 1:38 AM GMT)

ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் மசூதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதி முத்தவல்லிகள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், உதவி கலெக்டர் கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நோன்பை கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சிக்கான அரிசி மொத்தம் 97 மசூதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த மசூதிகளில் மொத்தம் 78,046 பேர் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அரிசியின் அளவு 1,72,889 கிலோ வழங்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்து கஞ்சி தயார் செய்து அருந்த வேண்டும். மசூதியில் இவைகளை செய்யக்கூடாது.

கருகம்பத்தூர், கொணவட்டம், ஆர்.என்.பாளையம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்னல்லாபுரம் ஆகியவை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாகும். அங்கு இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது. அங்கு வசிப்பவர்கள் முன்னேற்பாடுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜமாத்காரர்கள் எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், முத்தவல்லிகள், மசூதி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story