தேனி அருகே, மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தேனி அருகே, மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 April 2020 7:17 AM GMT (Updated: 23 April 2020 7:17 AM GMT)

தேனி அருகே மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி,

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). இவர், அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் (19). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் கோபிநாத் மிகவும் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் பணமோ, மதுபானமோ கோபிநாத்துக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிலையில் அவர் காணப்பட்டார்.

இந்தநிலையில் கோபிநாத் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கோபிநாத்தின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story