கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - ‘டிரோன்’ மூலம் கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை


கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - ‘டிரோன்’ மூலம் கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 April 2020 7:17 AM GMT (Updated: 23 April 2020 7:17 AM GMT)

கல்வராயன்மலையில் டிரோன் மூலம் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டு பிடித்து அழித்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் உள்ள மணியார்ப்பாளையம், அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் டிரோன் மூலம் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது டிரோன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மணியார்ப்பாளையம், அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.

பின்னர் டிரோன் உதவியுடன் நீரோடைகளின் அருகில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story