முந்திரி, மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்


முந்திரி, மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2020 2:40 AM GMT (Updated: 24 April 2020 2:40 AM GMT)

முந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

நாகர்கோவில், 

முந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை நேற்று மாலை குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன் (நாகர்கோவில் தொகுதி), மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), ஆஸ்டின் (கன்னியாகுமரி), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான உதவிகள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த 5 எம்.எல்.ஏ.க்களும் கூறியதாவது:-

சிகிச்சைக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்கிற நோயாளிகளுக்கு எந்த வித தடையுமின்றி சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதி வழங்குவதோடு, கேரள அரசுடன் இதுகுறித்து பேசி முடிவு எட்டப்பட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் இந்த மாவட்டத்தில் முந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளில் பணிபுரிகிற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்பதோடு பல கோடி மதிப்பிலான முந்திரி பருப்பு தேக்கமடைந்து கெட்டுப்போகும் நிலையில் உள்ளது. எனவே முந்திரி ஆலைகள், மீன் வலை தொழிற்சாலைகளில் குறைந்த அளவு தொழிலாளர்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம்

முடிதிருத்துவோர், சலவைத் தொழில் செய்வோர், பூக்கட்டும் தொழில் செய்வோர், சிறுதொழில் செய்வோர் மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், புதுப்பிக்கத் தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ரூ.2 ஆயிரம் தங்கு தடையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, சிறு ரப்பர் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை எடுத்து வைத்தோம். அவரும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story