கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் - தேசிய செட்டியார்கள் பேரவை வலியுறுத்தல்


கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் - தேசிய செட்டியார்கள் பேரவை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 April 2020 9:45 PM GMT (Updated: 24 April 2020 3:58 AM GMT)

கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர் பி.எல்.ஜெகநாத்மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உத்தமபாளையம்,

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி பல்வேறு கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு தேசிய செட்டியார்கள் பேரவை, பால முத்தழகு குழுமம், பெஸ்ட் மணி கோல்டு சார்பில் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கும், மதுரை மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏழை மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் நிவாரண பொருட் கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் ஊரடங்கால் சிறு வியாபாரிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் வெளிமாநிலத்தில் வியாபாரத்துக்காக சென்ற வியாபாரிகள் அங்கு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை தமிழகத்திற்கு அழைத்துவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலைக்காக சென்று, தாய்நாடு திரும்ப முடியாமல் அவதியடைந்து வரும் தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு எங்களின் தேசிய செட்டியார்கள் பேரவை துணை நிற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story