மீமிசல் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மீமிசல் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2020 4:30 AM GMT (Updated: 24 April 2020 4:30 AM GMT)

மீமிசல் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டைப்பட்டினம், 

மீமிசல் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை

மீமிசல் அருகே தத்தணி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). அவரது மகள் கிருஷ்ணபிரியா (13) அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நாராயணனை நேற்று மது விற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் மீமிசல் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த கிருஷ்ணபிரியா திடீரென தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கிருஷ்ணபிரியா உடலை, உறவினர்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் கிருஷ்ணபிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரியாவின் உறவினர்கள் உடலை தரமாட்டோம் என்று கூறினர். இதையறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்து, கிருஷ்ணபிரியாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கிருஷ்ணபிரியாவின் உடலை, அவரது உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணபிரியா உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராய ஊறல்கள் அழிப்பு

*கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (42) என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் உள்ளதாக கீரமங்கலம் போலீசாருக்கு வந்த தகவலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் வாழைத் தோட்டத்தை சோதனை செய்த போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய மண் பானையில் 50 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊறலில் உள்ள சாராயத்தை கொட்டி அழிக்கப்பட்டு பானை உடைக்கப்பட்டது. மேலும் போலீசார் வருவதை பார்த்து தப்பியோடிய ரவிக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

*கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கறம்பக்குடி தாசில்தார் சேக்அப்துல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு இருவேறு இடங்களில் தோட்டங்களில் இருந்து 900 லிட்டர் சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள், பேரல்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சாராய ஊறல்களை அழித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பலி

*பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தை சேர்ந்த சின்னக்கருப்பன் மனைவி பெசலி (77). இவர் வீட்டின் அருகே உள்ள கிணறு பக்கத்தில் கால்நடைகளுக்கு இலை தழைகளை அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பெசலி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

*மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருவிடைச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், கூலாங்கொல்லையை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story