பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடைக்காரர் நாகர்கோவிலில் பரபரப்பு


பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடைக்காரர் நாகர்கோவிலில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2020 12:49 AM GMT (Updated: 25 April 2020 1:09 AM GMT)

பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 

பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோழிக்கடைக்காரர்

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 26), கோழிக் கடை உரிமையாளர். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது.

அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினார்.

ஆபாச படங்கள்

இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளார். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளார். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினார். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story