தஞ்சை மாவட்டத்தில் 3-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை 37 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை


தஞ்சை மாவட்டத்தில் 3-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை 37 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
x
தினத்தந்தி 26 April 2020 10:48 PM GMT (Updated: 26 April 2020 10:48 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 3-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 37 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 3-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 37 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

55 பேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பெற்று குணமடைந்ததை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

இதேபோல் 21-ம் தேதி 3 பேரும், 23-ம் தேதி 3 பேரும், 24-ந் தேதி ஒருவரும், நேற்று முன்தினம் 10 பேர் என மொத்தம் 18 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

37 பேருக்கு சிகிச்சை

தஞ்சை மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் 2 பேர், 5 பேர் என தொற்று அதிகரித்தது. அதன் பின்னர் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று காணப்பட்டது. தற்போது வீடு திரும்பிய 18 பேரை தவிர தற்போது 37 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்ததால் அவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

3-வது நாளாக யாருக்கும் இல்லை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story