புளியந்தோப்பு, பாடிகுப்பம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி


புளியந்தோப்பு, பாடிகுப்பம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
x
தினத்தந்தி 27 April 2020 10:43 PM GMT (Updated: 27 April 2020 10:43 PM GMT)

சென்னை புளியந்தோப்பு மற்றும் பாடிகுப்பம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

திரு.வி.க.நகர், 

சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் அண்ணன், தம்பிகள் 3 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் நண்பர்கள் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதேபோல் நரசிம்மன் நகர், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள 5 பேர் என நேற்று ஒரே நாளில் புளியந்தோப்பு பகுதியில் மட்டும் 2 பெண்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இவர்களில் 2 பெண்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றவர்கள் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

அம்பத்தூர் மண்டலம்

அதேபோல் சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பாடிகுப்பம், அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த கோயம்பேடு மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்த வியாபாரிக்கு 25-ந்தேதி கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 37 பேர் கண்டறியப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நேற்று 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இந்த 13 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 5 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் திருமங்கலம் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story