இன்று மே தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இன்று மே தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 May 2020 4:37 AM GMT (Updated: 1 May 2020 4:37 AM GMT)

மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்கி கவுரவித்த நாள் தான் மே தினம். புதுவை அரசு பல தொழிலாளர் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கும் அசாதாரண சூழல் தற்போது உள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தையும் வென்றிடும் ஆற்றல் நம் தொழிலாளர் சமூகத்துக்கு உண்டு என்பதை இந்த உலகம் நன்கறியும். இந்த முடக்கம் தற்காலிகம் தான். மீண்டும் நம் தொழிலாளர்கள் முழுவீச்சுடன் பணியாற்றும் நாள் விரைவில் வரும். புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ரங்கசாமி

புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து உழைக்கும் சமுதாயத்தினருக்கும் மகிழ்ச்சியான, வளமான வாழ்வு கிடைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் உழைப்பாலும், வியர்வையாலும் உருவாகிறது. அத்தகைய உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அன்பழகன் எம்.எல்.ஏ.

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி மாநிலத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். போராடி பெற்ற தொழிலாளர்கள் உரிமையை பேணிக்காப்பது தொழிலாளர்கள் மற்றும் அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.

வையாபுரி மணிகண்டன்

புதுச்சேரி அ.தி.மு.க. கொறடா வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் கைகளால் தான் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்ற உறுதியோடு உழைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க.

அ.ம.மு.க. புதுவை மாநில செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உழைத்து வாழும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் வைரஸ் நோய் மற்றும் அனுபவமற்ற அரசியலால் சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை சரி செய்யவும், மீண்டும் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் தொழிலாளர்களால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story