ராஜபாளையம் அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்


ராஜபாளையம் அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 1 May 2020 10:45 PM GMT (Updated: 1 May 2020 10:13 PM GMT)

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து யானைகள் மாந்தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தம்பாத்து ஊருணியை அடுத்து வண்டிப்பண்ணை பீட் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காய்கள் விளைச்சல் அடைந்து உள்ளதால், காய் பறிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து உணவு தேடி வரும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய தோப்புகளில் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் என்பவரது மாந்தோப்பில் புகுந்த யானைகள், அங்கு 15-க்கும் மேற்பட்ட மா மரங்களை சாய்த்து சேதப்படுத்தி சென்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வனமூர்த்தி என்பவரின் தோப்பில் இருந்த ஒரு மா மரத்தை வேருடன் சாய்த்து சேதப்படுத்தியதுடன், காய்களையும் தின்றன. இதனால் விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் யானைகள் கூட்டமாக வருவதால் அவற்றை பட்டாசு வெடித்தும்கூட விரட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

எனவே சேதமான மரங்களுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் போதுமான ஆழத்திற்கு அகழி வெட்டி யானைகள் விவசாய தோப்புகளுக்குள் வராதவாறு தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story