கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 2 May 2020 10:20 PM GMT (Updated: 2 May 2020 10:20 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தஞ்சாவூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் வண்ணங்களில் அனுமதி அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர முடியும். மூன்று வண்ண அனுமதி அட்டைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த முடியாது. எனவே தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்காக கடைப்பிடிக்கப்படும். எனவே தவிர்க்கமுடியாத காரணங்களை தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இன்று எந்த அட்டைக்கும் அனுமதி கிடையாது. குடிநீர், பால் மற்றும் மருத்துவ தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தடை காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்திலும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வாரத்திற்கு 2 நாட்கள் வீதம் 6 நாட்கள் மட்டும் வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எந்த அட்டைக்கும் அனுமதியும் கிடையாது. அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

முழு ஒத்துழைப்பு

இதில் அவசர மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேற்காணும் விதிகளில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story