வட மாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்ப அனுமதி பெறும் பணி முற்றுகையிட்ட தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு உறுதி


வட மாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்ப அனுமதி பெறும் பணி முற்றுகையிட்ட தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு உறுதி
x
தினத்தந்தி 3 May 2020 4:32 AM GMT (Updated: 3 May 2020 4:32 AM GMT)

வடமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்ப அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறும் பணி நடக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் அனைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என முற்றுகையிட்ட தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தார்.

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதி சீட்டின் பேரில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய வடமாநிலத்தவர்கள் ஆம்புலன்ஸ், கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறாக சென்ற கார், ஆம்புலன்ஸ்கள் டிரைவர்கள் வேலூருக்கு திரும்பி வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பிறமாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த பிறமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை அறிந்த வேலூரில் தங்கியிருந்த வடமாநிலத்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வடமாநிலத்தவர்கள், பிறமாநிலங்கள், மாவட்டங்களில் தங்கி இருக்கும் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு பஸ், ரெயில்களில் செல்கின்றனர். அதேபோன்று எங்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு போலீஸ் சூப்பிரண்டு, ஒரு மாநிலத்தில் தங்கியிருக்கும் நபர்களை மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். பிற மாநில அரசிடம் அனுமதி பெறும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்காரணமாகவே வேலூரில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டவில்லை. அதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பான தகவல் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். அதுவரை வடமாநிலத்தவர்கள் விடுதி, தங்கும் விடுதியில் தங்கி இருக்க வேண்டும். சாப்பாடு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும். தேவையின்றி தெருக்களில் சுற்றித்திரிய கூடாது என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story