ஊதியூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; சப்-கலெக்டர் விசாரணை


ஊதியூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; சப்-கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 3 May 2020 11:00 PM GMT (Updated: 3 May 2020 6:13 PM GMT)

ஊதியூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாராபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.

காங்கேயம்,

காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 30).விவசாயி. இவருடைய மனைவி திவ்யா (24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற ஈஸ்வரன் பகல் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஈஸ்வரன் தனது மனைவி பெயரை சொல்லி கதவை தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படவில்லை.மனைவியின் சத்தமும் கேட்காததால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு பார்த்த போது வீட்டிற்குள் தீயில் கருகி திவ்யா பிணமாக கிடந்துள்ளார்.அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மனவேதனை அடைந்த அவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத விசாரணைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களது மகள் ஊதியூரில் திவ்யாவின் தாய் வீட்டில் உள்ளாள். திவ்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் விசாரணை நடத்த உள்ளார்.

Next Story